தமிழகத்தில், 14 மாநகராட்சிகள் இருந்த நிலையில் 15-வது மாநகராட்சியாக ஆவடி தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில், திருச்சி, சென்னை, சேலம், மதுரை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 14 மாநகராட்சிகள் உள்ளன. அதில், கடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஓசூர், நாகர்கோவில் ஆகிய இரு நகரங்களும் புதிய மாநகராட்சிகளாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அவசர சட்டமாக ஆளுநர் ஒப்புதல் தெரிவித்து ஆவடியை மாநகராட்சியாக அறிவிப்பதற்காக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆவடியில் ராணுவ தளவாட ஆலை, ராணுவத்துக்கான ஆடை தயாரிக்கும் ஆலை உள்ளிட்ட தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதன் காரணமாக மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த அறிவிப்பாணை உடனடியாக அமலுக்கு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு ஆகிய நகராட்சிகளும், திருநின்றவூர் பேரூராட்சியும் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, நெமிலிச்சேரி, நசரத்பேட்டை, காட்டுப்பாக்கம், ஐயப்பாக்கம் உள்ளிட்ட 11 கிராம பஞ்சாயத்துகள் ஆவடி மாநகராட்சியில் வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆவடி மாநகராட்சியானது மொத்த பரப்பளவாக 148 சதுர கி.மீ பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.